Saturday 16 April 2016

கடவுளின் ஏஜென்டுகள்

நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை தூற்றுவது தவறென்று கொள்பவன். ஆனால், வாழ்வில் சில நிகழ்வுகள் நம்முடைய எண்ணங்களை, புரிதல்களை சற்றே சோதித்து பார்த்து விடுகின்றன. நான் மட்டும் தான் என் வீட்டில் கடவுள் நம்பிகை இல்லாதவன் மற்றபடி என் தந்தை, அம்மா, அண்ணன் & தங்கை என்று அனைவருமே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே. சில சமயங்களில் அவர்கள் பரிகாரங்களுக்காக என்னை கோயில்களுக்கு அழைக்கும் போது மறுக்காமல் செல்வேன். நம் தமிழர்களின் பாரம்பரியம் மிக்க அழகிய கட்டமைப்புகளை மிகுந்த பிரமிப்புடன் ரசித்துவிட்டு திரும்புவேன். இது வரை சென்ற எல்லா கோயில்களிலிருந்து திரும்பும் போதும் பெரிதும் பாதிப்புகள் இல்லாமல் தான் திரும்புவேன். ஆனால், சமீபத்தில் நான் திருச்சியிலுள்ள ஒரு பழம்பெரும் கோயிலுக்கு சென்று திரும்பும் போது நொந்த மனதுடனே திரும்பினேன். காரணம் கடவுளினின் பேரால் அங்கு நடக்கும் பகல் கொள்ளை தான். இப்படிப்பட்ட நிகழ்வுகள் எனக்கு ஒன்றை மட்டுமே விளக்கியது, "நாத்தீகம் பேசுபவனை விட, கடவுள் பெயரால் ஊரை ஏமாற்றும் ஆத்தீகன் நாத்தீகனுக்கெல்லாம் பெரும் நாத்தீகன்" என்பதையே.

பொதுவாக இந்த ஏமாற்று வேலை மனிதர்களின் மனதில் வாழ்க்கை குறித்த அச்சத்தை வைத்தே நடக்கிறது. அந்த அச்சத்தை அவர்களாலேயே சமாளித்து விட இயலுமென்றாலும், அவர்கள் ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தியின் உதவி இருந்தால் அந்த செயலை முடித்து விட யானை பலம் பெற்று விட்ட உணர்வை அடைகிறார்கள். அந்த கண்ணுக்கு தெரியாத சக்தி கடவுள்களே. இந்த கடவுள்களின் தேவைகளை பட்டியலிட்டு மக்களுக்கு காட்டுபவர்களே கோயில் பூசாரிகளும், ஜோதிடர்களும். கடவுளை கண்ணால் காண இயலாது என்பதால் அவர்கள் இந்த இரு மகா புருஷர்களின் வார்த்தைகள் அனைத்தையுமே அப்பட்டமாக நம்புகின்றனர். வாழ்க்கையின் மேல் மனிதனுக்கு இருக்கும் அச்சம் மற்றும் அதனை ஏதோ ஒரு வழியில் கடவுளுக்கு சொல்லி வழி காண்கிறோம் என்று சொல்லும் வீணர்களின் மீது உள்ள நம்பிக்கையே இந்த ஏமாற்று வேலை நடப்பதற்கான இரு காரணங்கள் என்று தோன்றுகிறது. இந்த இரு காரணங்கள் என் மனதின் ஏதோ ஒரு மூலையில் கிடந்தது. அதனை உண்மை என்று உணர்த்திவிட்டு போனது ஒரு நிகழ்வு. இப்பொழு அந்த நிகழ்வில் சம்மந்தப்பட்ட முதல் காரணியை பற்றி காண்போம்.

என் அண்ணனுக்கு வயது முப்பதை தாண்டிவிட்டது. அவனுக்கு இன்னும் மணம் முடிக்க இயலவில்லை என்ற வருத்தம் என் பெற்றோரை கொன்று கொண்டிருக்கிறது. இது அவர்களின் அச்சம். பல முயற்ச்சிகளுக்கு பின்னும் தோல்விகளை சந்தித்தவர்கள் ஒரு தனிப் பெரும் சக்தியின் உதவி கிட்டினால் அது நம்மை கை தூக்கி விட்டுவிடும் என்று நம்புகிறார்கள். இப்பொழுது அந்த ஏமாற்று வேலைக்கு தேவையான இரு பொருள்கள் தயாராக உள்ளனவா ? விடுவார்களா கடவுளின் ஏஜென்டுகள் ? இதில் முதல் ஏஜென்டாக வருபவர் ஜோதிடரே. என் அம்மா எங்கெங்கோ கேட்டறிந்து ஒருவரை தேர்ந்தெடுத்து அவரிடம் செல்கிறார். எல்லோரும் இந்த ஏமாற்று வேலையில் ஒரு இடத்தில் தன்னை தானே விவரமானவர் என்று எண்ணிக் கொள்கின்றனர். அது என்னவென்றால், ஜோதிடம் பார்த்துவிட்டு பரிகாரம் செய்கிறேன் என்று சொல்பவன் ஏமாற்றுக்காரனாம், ஒரு கோயிலுக்கு சென்று இந்த பூஜையை செய்யுங்கள் அவர்கள் கேட்கும் பணத்தை அவரிடமே கொடுத்துவிடுங்கள் என்று சொல்பவர் மிக்க நல்லவராம். நானும் அப்படியே எண்ணினேன். ஆனால், ஏஜென்டுகளின் தொழில் ரகசியம் கோயிலுக்கு சென்ற பின் தானே தெரிந்தது.

அந்த ஜோதிட ஏஜென்ட் மருந்து எழுதிக் கொடுக்கும் சீட்டு போல இருந்த ஒரு காகிதத்தில் பூஜையின் விவரங்கள், பிள்ளையின் ஜாதக விவரங்கள் என்று அனைத்தையும் தெளிவாக எழுதிக் கொடுக்கிறார். அதில் அவரது பெயர், முகவரி கைபேசி எண் முதற்கொண்டு எல்லா விவரங்களும் இருந்தன. எல்லா வாரமும் ஞாயிற்றுக்கிழமையில் திருமணம் தாமதமாகும் பெண், ஆண் இருபாலருக்கும் இந்த பூஜை நடக்கிறது என்று அவர் கூறியிருந்தார். நானும் என் அன்னை தந்தையின் ஆசையை கெடுப்பானேன் என்று அவர்களுடன் திருச்சி சென்றேன். கோயிலை சுற்றிலும் சாதாரண அரைகள், டீலக்ஸ், சூபர் டீலக்ஸ் அரைகள் கொண்ட ஹோட்டல்கள் நிரம்பி வழிந்தன. கோயில்களிலேயே பணம் உள்ளவனுக்கு தனி வரிசை இருக்கும் போது வெளியே அரைகள் இருந்தாலென்ன என்று எனக்கு நானே சொல்லிச் சிரித்துக்கொண்டே அங்கிருந்த ஒரு ஹோட்டலில் இரு அரைகள் எடுத்து தங்கினோம். அன்று இரவு கோயிலுக்கு சென்று மூலவரை தரிசித்துவிட்டு பூஜை செய்ய வேண்டிய கோயிலை பார்த்துவிட்டு வரலாம் என்று அப்பா சொல்ல அனைவரும் ஒப்புக்குண்டு சென்றோம். மூலவரை தரிசித்துவிட்டு அவர் சொன்ன கோயிலை தேடிக்கொண்டே அங்கிருந்த அனைத்து கோயில்களையும் பார்த்தோம். அங்கிருந்த ஒரு சிறு கோயிலுக்குள் சென்றதும் எங்களை ஏற இறங்க பார்த்த பூசாரி "யாரு உங்க பசங்களா, கல்யாணமாயிடுத்தா?" என்று கேட்க என் அம்மா அசட்டு சிரிப்புடன் தலையை அசைத்து இல்லை என்று சைகையில் கூறீனார். "நாளைக்கு காலையில் வந்தேள்னா, நம்ம மூலவருக்கு பூஜைய பன்னிடுவோம், அடித்த ஒரு சில மாசத்துலயே புள்ளையாண்டானுக்கு கல்யாணமாயிடும் பாத்துக்கோங்கோ" என்று பல்லிளித்தார். "இல்லைங்க இதே கோயில்ல வேற ஒரு பூஜ செய்யனும்னு வந்தோங்க" என்று சொல்லி தன் கையிலிருந்த ஜோதிடர் அளித்த சீட்டை நீட்டியதும்."தெரியல மா, வெளிய கேட்டுக்கோங்கோ" என்று சுருங்கிப்போன முத்தை வைத்துக்கொண்டு சொல்லிவிட்டு அவர் வேலையை கவனித்தார். அருமையான ஒரு பிஸ்னஸ் கை நழிவிப்போனதின் வருத்தம் அவர் பேச்சிலும், சைகையிலும் நன்றாக தெரிந்தது.

சிறிது நேரம் தேடிவிட்டு எப்படியோ அந்த கோயிலைக் கண்டு பிடித்தோம். அடுத்த நாள் காலை 8 மணிக்கே அந்த கோயிலுக்கு சென்றோம். அங்கிருந்த கூட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். கிட்டத்தட்ட 60க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் அவரவர் பிள்ளைகளுடன் அந்த சிறு கோயிலுக்கு வெளியே காத்திருந்தனர். இன்னமும் அந்த பூஜைக்கான செலவு என்னவென்று எங்களுக்குத் தெரியவே தெரியாது. சிறிது நேரம் கழித்து பூசாரி ஒருவர் வந்து "வந்திருக்கவா எல்லாரும் சீட்ட கொடுங்கோ.." என்றார். இவருக்கு எப்படி சீட்டு விவகாரம் தெரியும். திருச்சி கோயிலிலுள்ள பூசாரிக்கு சென்னை அமிஞ்சிக்கரையிலுள்ள ஜோசியர் எழுதிக் கொடுத்த சீட்டைப் பற்றி இவருக்கு எப்படி தெரிந்தது என்று வியப்பில் நான் இருந்த போது தான் எல்லோரிடமும் அப்படி ஒரு சீட்டு இருப்பது தெரிந்தது. எல்லா சீட்டுகளும் வெவ்வேறு அளவுகளில், நிரங்களில் இருந்தன. அவை அனைத்தும் குறிப்பிட்ட ஒரு 5 அல்ல 6 ஜோதிடர்களிடம் இருந்து பெற்றவை என கணிக்க முடிந்தது. என் அம்மா பார்த்த ஜோதிடர் கொடுத்த சீட்டு போலவே 6 அல்ல 7 சீட்டுகள் பார்த்த ஞாபகம். திருச்சியிலிருக்கும் பூசாரிகளுக்கும் இன்னும் பல ஊர்களில் உள்ள ஜோதிடர்களுக்கும் இருக்கு தொடர்பை இது காட்டியது. அதுவும் கொடுமை என்னவென்றால் அந்த பூஜைக்காக அவர்கள் பெற்ற ஃபீஸ்(காணிக்கை - ஃபீஸுக்கு இடப்பட்டிருக்கு டீஜண்டான பெயர்) தலைக்கு ரூ 4000. உயிர் போய் உயிர் வந்தது எனக்கு. அந்த பூஜைக்கு அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் அனைத்துமே கோயில்களில் சாதாரணமாக கிடைக்கக் கூடியவையே. அதற்கு அவர்கள் பெரிதாக பணம் ஏதும் செலவு செய்யப் போவதில்லை என்று தெரிந்தது. தலைக்கு ரூ 4000 என்று பார்த்தால் அன்றைய வசூல் மட்டும் ரூ 2,40,000 (60 பேருக்கு - கணக்கு சரி தானே. நான் குமாரசாமி இல்லை !!!). என்ன பகல் கொள்ளை இது.

பூஜைக்கு வந்திருந்த பெண்கள்/ஆண்கள் பெரும்பாலும் 25 வயதிற்கு உட்பட்டவர்களாகவே தெரிந்தனர். 25 வயதுக்கு உட்பட்ட பெண்/ஆண் திருமணமாகவில்லை என்று பரிகாரம் செய்யச் சொல்லி அனுப்பியிருக்கும் ஜோதிட ஏஜன்டுகளின் கரிசனத்தை என்னவென்று சொல்ல. அவர் தாராளமாக அந்த பெண்ணை பெற்றவர்களிடம் "தினம் கடவுளை வணங்கி நம்பிக்கையோடு இருங்கள், பெண்ணுக்கு வயதிருக்கிறது" என்று சொல்லி திருப்பி அனுப்பியிருக்கலாமே. அகப்படும் அனைத்தையும் வைத்து தொழில் செய்தால் தானே முன்னேர இயலும் (உட்கார்ந்த இடத்திலே இருந்து கொண்டு) என்று வருபருக்கெல்லாம் ஏதாவது ஒரு கோயிலுக்கு சீட்டெழுதி கொடுத்துவிடுகிறார் கடவுளின் முதல் ஏஜென்ட். இரண்டாம் ஏஜென்டான கோயில் பூசாரி அந்தச் செயலை முடித்து வைத்து ஆண்டவனுக்கு இவர்களின் துனபத்தை தெரிவித்துவிட்ட திருப்தியுடன் வழியனுப்பி வைக்கிறார். அதற்கு பின் தான் பண பட்டுவாட இரு ஏஜென்டுகளுக்கும் இடையே நடந்து முடிகிறது. பூஜை செய்தாலும் செய்யாவிட்டாலும் நடக்கப் போகும் நிகழ்வுக்கு இந்த விரையம். நடந்துவிட்ட பின் "பன்ன பரிகாரத்துக்கு நல்ல வழிய காட்டிட்டான் அந்த கடவுளு" என்று கன்னத்தில் போட்டுக் கொள்கின்றனர். இந்த மக்களே பின்பு இந்த ஏஜென்டுகளை இலவசமாக விளம்பரம் வேறு செய்து தருகிறார்கள்.

இதையெல்லாம் பார்க்க சகிக்காமல் பூஜை துவங்கும் முன்னமே கிளம்பி நாங்கள் தங்கியிருந்த விடுதியை அடைந்தேன். இப்படி ஏன் ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறார்கள் என்று அந்த இரு ஏஜென்டுகளையும் மனதுக்குள் திட்டி தீர்த்தேன்.

ஒன்று மட்டும் உண்மை...

கடவுள் இல்லையென்று சொல்லும் என்னைப் போன்ற நாத்தீகர்களை விடுங்கள், கடவுள் பெயரால் பகல் கொள்ளை அடிக்கும் இது போன்ற ஏஜென்டுகளை வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி வையுங்கள்.

- ராஜேஷ் சுப்பிரமணியன்.

No comments:

Post a Comment