Saturday 16 April 2016

தீபா"வலி" - 2015 தீபாவளியன்று எழுதியது

இத்துப் போன ஓலக் குடிச வானத்துல
நட்சத்திரம் போல பொத்த நூறு
நட்சத்திரம் வழியே நெலா பாத்துட்டே
பண்டிகைக்கு இன்னும் பத்து நாளிருக்க
தூக்கமில்லாம தவிக்கிது பிஞ்சிக ரெண்டும்

இந்த வருசமாச்சி வெடிக்க வேட்டு உண்டா ?
ரெண்டு மூனு இல்லைனாலும்
ஒத்த சட்டையாவது நமக்குண்டா ?
ஒருத்தன் மூஞ்சிய ஒருத்தன் பாத்துட்டு
ஒவ்வொரு நாளும் ஏக்கத்துலயே ஓடுது

வாங்குற சம்பளம் வயத்துக்கே போதல
ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு ஆளுன்னு
ஊருக்குள்ள கடன் வாங்காத ஆளில்ல
இதுல தீபாவளிக்கு சட்டை ஏது ?
வெடிச்சி கரியாக்க வேட்டு ஏது ?

ஊருக்குள்ள எல்லா பயலுகளும்
விடிஞ்சதும் புதுத்துணி உடுத்தி
போட்டி போட்டு வேட்டு வைக்க
பெத்த புள்ளைங்க வெறிச்சி பாக்குறத
பாத்து பாத்து இத்தன வருசம் ஓடிப் போச்சி

சீட்டு கட்டி வந்த பணத்துல அப்பனால முடிஞ்சது
ஆளுக்கொரு மொளகா வெடி பையி
இனிப்பு கரம் அதுக்கு இதுக்குன்னு
செலவு போக மிஞ்சினது வெறுங்கையி
இதுல புதுத்துணிக்கு எங்க போயி கையேந்த

இருந்த ஒரு சோடி தோடு கடையில தூங்க
மூக்குத்திய வச்சி தீபாவளிய ஓட்டிறலாம்
எதுவுமே இல்லைனாலும் கறி ஆக்கி போட்டுறலாம்
எப்பவும் போல இந்த வருசமும் ஏமாந்த கவலையில
பிஞ்சிகளுக்கு கறிச்சாறுல சுவையும் தெரியல

எவன் வீட்டு வேடு சத்தம் பெருசுன்னு
அக்கம்பக்கத்துல போட்டி போட்டு வேட்டு போட
மொளகா வெடி சத்தம் எங்க கேக்க போவுதுன்னு
அண்ணனும் தம்பியும் ஆளுக்கொரு பக்கம்
அடுத்தவன் போடுற வேட்ட வேடிக்க பாத்தானுக

பொறந்த மேனியா குட்டி பயலுக ரெண்டு
வெடிக்காத வேட்டுகள பொறுக்கிச் சேத்து
வேட்டுகள்ல மருந்தெடுத்து காகிதத்துல நெறப்பி
நாலு மூலையிலயும் நெறுப்பு வச்சதுக
மருந்துல நெறுப்பு புடிக்க மின்னலாட்டம் ஒரு வெளிச்சம்

வெளிச்சத்த பாத்த வண்டுக ரெண்டும்
குதியாட்டம் போட்டு ஆடி முடிச்சதும்
அடுத்த தெரு போனானுக வேட்டு வேட்டைக்கு
ஒன்னுமே இல்லாத வாண்டுக ஆட்டத்த பாத்து
அண்ணன் தம்பிக்கு ஒதட்டோரமா கசியிது சிரிப்பு

அவனவனுக்கு போட்டுக்க துணி இல்ல
நமக்கு கசக்கி போட பழய சட்டை இருக்கு
ஆன வெடி குதிர வெடின்னு இல்லைனாலும்
நம்ம தகுதிக்கு ஊசி வெடியாச்சும் இருக்குன்னு
அண்ணன் தம்பி கண்ணும் மனசும் பேசிக்கிச்சு

நம்ம கையில இல்லாதது தான் நம்ம கவல
இன்னைக்கு கையில இருக்குறது எல்லாம் இன்பமின்னு
புரிஞ்சி போச்சி அண்ணன் தம்பிக்கு
இல்லாதத விட்டு இருக்குறத அனுபவிச்சி
இன்பமா கழிஞ்சது தீபாவலி

இனி எப்பவுமே இன்பம் தான....

No comments:

Post a Comment