Saturday 16 April 2016

தீபா"வலி" - 2015 தீபாவளியன்று எழுதியது

இத்துப் போன ஓலக் குடிச வானத்துல
நட்சத்திரம் போல பொத்த நூறு
நட்சத்திரம் வழியே நெலா பாத்துட்டே
பண்டிகைக்கு இன்னும் பத்து நாளிருக்க
தூக்கமில்லாம தவிக்கிது பிஞ்சிக ரெண்டும்

இந்த வருசமாச்சி வெடிக்க வேட்டு உண்டா ?
ரெண்டு மூனு இல்லைனாலும்
ஒத்த சட்டையாவது நமக்குண்டா ?
ஒருத்தன் மூஞ்சிய ஒருத்தன் பாத்துட்டு
ஒவ்வொரு நாளும் ஏக்கத்துலயே ஓடுது

வாங்குற சம்பளம் வயத்துக்கே போதல
ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு ஆளுன்னு
ஊருக்குள்ள கடன் வாங்காத ஆளில்ல
இதுல தீபாவளிக்கு சட்டை ஏது ?
வெடிச்சி கரியாக்க வேட்டு ஏது ?

ஊருக்குள்ள எல்லா பயலுகளும்
விடிஞ்சதும் புதுத்துணி உடுத்தி
போட்டி போட்டு வேட்டு வைக்க
பெத்த புள்ளைங்க வெறிச்சி பாக்குறத
பாத்து பாத்து இத்தன வருசம் ஓடிப் போச்சி

சீட்டு கட்டி வந்த பணத்துல அப்பனால முடிஞ்சது
ஆளுக்கொரு மொளகா வெடி பையி
இனிப்பு கரம் அதுக்கு இதுக்குன்னு
செலவு போக மிஞ்சினது வெறுங்கையி
இதுல புதுத்துணிக்கு எங்க போயி கையேந்த

இருந்த ஒரு சோடி தோடு கடையில தூங்க
மூக்குத்திய வச்சி தீபாவளிய ஓட்டிறலாம்
எதுவுமே இல்லைனாலும் கறி ஆக்கி போட்டுறலாம்
எப்பவும் போல இந்த வருசமும் ஏமாந்த கவலையில
பிஞ்சிகளுக்கு கறிச்சாறுல சுவையும் தெரியல

எவன் வீட்டு வேடு சத்தம் பெருசுன்னு
அக்கம்பக்கத்துல போட்டி போட்டு வேட்டு போட
மொளகா வெடி சத்தம் எங்க கேக்க போவுதுன்னு
அண்ணனும் தம்பியும் ஆளுக்கொரு பக்கம்
அடுத்தவன் போடுற வேட்ட வேடிக்க பாத்தானுக

பொறந்த மேனியா குட்டி பயலுக ரெண்டு
வெடிக்காத வேட்டுகள பொறுக்கிச் சேத்து
வேட்டுகள்ல மருந்தெடுத்து காகிதத்துல நெறப்பி
நாலு மூலையிலயும் நெறுப்பு வச்சதுக
மருந்துல நெறுப்பு புடிக்க மின்னலாட்டம் ஒரு வெளிச்சம்

வெளிச்சத்த பாத்த வண்டுக ரெண்டும்
குதியாட்டம் போட்டு ஆடி முடிச்சதும்
அடுத்த தெரு போனானுக வேட்டு வேட்டைக்கு
ஒன்னுமே இல்லாத வாண்டுக ஆட்டத்த பாத்து
அண்ணன் தம்பிக்கு ஒதட்டோரமா கசியிது சிரிப்பு

அவனவனுக்கு போட்டுக்க துணி இல்ல
நமக்கு கசக்கி போட பழய சட்டை இருக்கு
ஆன வெடி குதிர வெடின்னு இல்லைனாலும்
நம்ம தகுதிக்கு ஊசி வெடியாச்சும் இருக்குன்னு
அண்ணன் தம்பி கண்ணும் மனசும் பேசிக்கிச்சு

நம்ம கையில இல்லாதது தான் நம்ம கவல
இன்னைக்கு கையில இருக்குறது எல்லாம் இன்பமின்னு
புரிஞ்சி போச்சி அண்ணன் தம்பிக்கு
இல்லாதத விட்டு இருக்குறத அனுபவிச்சி
இன்பமா கழிஞ்சது தீபாவலி

இனி எப்பவுமே இன்பம் தான....

கடவுளின் ஏஜென்டுகள்

நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை தூற்றுவது தவறென்று கொள்பவன். ஆனால், வாழ்வில் சில நிகழ்வுகள் நம்முடைய எண்ணங்களை, புரிதல்களை சற்றே சோதித்து பார்த்து விடுகின்றன. நான் மட்டும் தான் என் வீட்டில் கடவுள் நம்பிகை இல்லாதவன் மற்றபடி என் தந்தை, அம்மா, அண்ணன் & தங்கை என்று அனைவருமே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே. சில சமயங்களில் அவர்கள் பரிகாரங்களுக்காக என்னை கோயில்களுக்கு அழைக்கும் போது மறுக்காமல் செல்வேன். நம் தமிழர்களின் பாரம்பரியம் மிக்க அழகிய கட்டமைப்புகளை மிகுந்த பிரமிப்புடன் ரசித்துவிட்டு திரும்புவேன். இது வரை சென்ற எல்லா கோயில்களிலிருந்து திரும்பும் போதும் பெரிதும் பாதிப்புகள் இல்லாமல் தான் திரும்புவேன். ஆனால், சமீபத்தில் நான் திருச்சியிலுள்ள ஒரு பழம்பெரும் கோயிலுக்கு சென்று திரும்பும் போது நொந்த மனதுடனே திரும்பினேன். காரணம் கடவுளினின் பேரால் அங்கு நடக்கும் பகல் கொள்ளை தான். இப்படிப்பட்ட நிகழ்வுகள் எனக்கு ஒன்றை மட்டுமே விளக்கியது, "நாத்தீகம் பேசுபவனை விட, கடவுள் பெயரால் ஊரை ஏமாற்றும் ஆத்தீகன் நாத்தீகனுக்கெல்லாம் பெரும் நாத்தீகன்" என்பதையே.

பொதுவாக இந்த ஏமாற்று வேலை மனிதர்களின் மனதில் வாழ்க்கை குறித்த அச்சத்தை வைத்தே நடக்கிறது. அந்த அச்சத்தை அவர்களாலேயே சமாளித்து விட இயலுமென்றாலும், அவர்கள் ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தியின் உதவி இருந்தால் அந்த செயலை முடித்து விட யானை பலம் பெற்று விட்ட உணர்வை அடைகிறார்கள். அந்த கண்ணுக்கு தெரியாத சக்தி கடவுள்களே. இந்த கடவுள்களின் தேவைகளை பட்டியலிட்டு மக்களுக்கு காட்டுபவர்களே கோயில் பூசாரிகளும், ஜோதிடர்களும். கடவுளை கண்ணால் காண இயலாது என்பதால் அவர்கள் இந்த இரு மகா புருஷர்களின் வார்த்தைகள் அனைத்தையுமே அப்பட்டமாக நம்புகின்றனர். வாழ்க்கையின் மேல் மனிதனுக்கு இருக்கும் அச்சம் மற்றும் அதனை ஏதோ ஒரு வழியில் கடவுளுக்கு சொல்லி வழி காண்கிறோம் என்று சொல்லும் வீணர்களின் மீது உள்ள நம்பிக்கையே இந்த ஏமாற்று வேலை நடப்பதற்கான இரு காரணங்கள் என்று தோன்றுகிறது. இந்த இரு காரணங்கள் என் மனதின் ஏதோ ஒரு மூலையில் கிடந்தது. அதனை உண்மை என்று உணர்த்திவிட்டு போனது ஒரு நிகழ்வு. இப்பொழு அந்த நிகழ்வில் சம்மந்தப்பட்ட முதல் காரணியை பற்றி காண்போம்.

என் அண்ணனுக்கு வயது முப்பதை தாண்டிவிட்டது. அவனுக்கு இன்னும் மணம் முடிக்க இயலவில்லை என்ற வருத்தம் என் பெற்றோரை கொன்று கொண்டிருக்கிறது. இது அவர்களின் அச்சம். பல முயற்ச்சிகளுக்கு பின்னும் தோல்விகளை சந்தித்தவர்கள் ஒரு தனிப் பெரும் சக்தியின் உதவி கிட்டினால் அது நம்மை கை தூக்கி விட்டுவிடும் என்று நம்புகிறார்கள். இப்பொழுது அந்த ஏமாற்று வேலைக்கு தேவையான இரு பொருள்கள் தயாராக உள்ளனவா ? விடுவார்களா கடவுளின் ஏஜென்டுகள் ? இதில் முதல் ஏஜென்டாக வருபவர் ஜோதிடரே. என் அம்மா எங்கெங்கோ கேட்டறிந்து ஒருவரை தேர்ந்தெடுத்து அவரிடம் செல்கிறார். எல்லோரும் இந்த ஏமாற்று வேலையில் ஒரு இடத்தில் தன்னை தானே விவரமானவர் என்று எண்ணிக் கொள்கின்றனர். அது என்னவென்றால், ஜோதிடம் பார்த்துவிட்டு பரிகாரம் செய்கிறேன் என்று சொல்பவன் ஏமாற்றுக்காரனாம், ஒரு கோயிலுக்கு சென்று இந்த பூஜையை செய்யுங்கள் அவர்கள் கேட்கும் பணத்தை அவரிடமே கொடுத்துவிடுங்கள் என்று சொல்பவர் மிக்க நல்லவராம். நானும் அப்படியே எண்ணினேன். ஆனால், ஏஜென்டுகளின் தொழில் ரகசியம் கோயிலுக்கு சென்ற பின் தானே தெரிந்தது.

அந்த ஜோதிட ஏஜென்ட் மருந்து எழுதிக் கொடுக்கும் சீட்டு போல இருந்த ஒரு காகிதத்தில் பூஜையின் விவரங்கள், பிள்ளையின் ஜாதக விவரங்கள் என்று அனைத்தையும் தெளிவாக எழுதிக் கொடுக்கிறார். அதில் அவரது பெயர், முகவரி கைபேசி எண் முதற்கொண்டு எல்லா விவரங்களும் இருந்தன. எல்லா வாரமும் ஞாயிற்றுக்கிழமையில் திருமணம் தாமதமாகும் பெண், ஆண் இருபாலருக்கும் இந்த பூஜை நடக்கிறது என்று அவர் கூறியிருந்தார். நானும் என் அன்னை தந்தையின் ஆசையை கெடுப்பானேன் என்று அவர்களுடன் திருச்சி சென்றேன். கோயிலை சுற்றிலும் சாதாரண அரைகள், டீலக்ஸ், சூபர் டீலக்ஸ் அரைகள் கொண்ட ஹோட்டல்கள் நிரம்பி வழிந்தன. கோயில்களிலேயே பணம் உள்ளவனுக்கு தனி வரிசை இருக்கும் போது வெளியே அரைகள் இருந்தாலென்ன என்று எனக்கு நானே சொல்லிச் சிரித்துக்கொண்டே அங்கிருந்த ஒரு ஹோட்டலில் இரு அரைகள் எடுத்து தங்கினோம். அன்று இரவு கோயிலுக்கு சென்று மூலவரை தரிசித்துவிட்டு பூஜை செய்ய வேண்டிய கோயிலை பார்த்துவிட்டு வரலாம் என்று அப்பா சொல்ல அனைவரும் ஒப்புக்குண்டு சென்றோம். மூலவரை தரிசித்துவிட்டு அவர் சொன்ன கோயிலை தேடிக்கொண்டே அங்கிருந்த அனைத்து கோயில்களையும் பார்த்தோம். அங்கிருந்த ஒரு சிறு கோயிலுக்குள் சென்றதும் எங்களை ஏற இறங்க பார்த்த பூசாரி "யாரு உங்க பசங்களா, கல்யாணமாயிடுத்தா?" என்று கேட்க என் அம்மா அசட்டு சிரிப்புடன் தலையை அசைத்து இல்லை என்று சைகையில் கூறீனார். "நாளைக்கு காலையில் வந்தேள்னா, நம்ம மூலவருக்கு பூஜைய பன்னிடுவோம், அடித்த ஒரு சில மாசத்துலயே புள்ளையாண்டானுக்கு கல்யாணமாயிடும் பாத்துக்கோங்கோ" என்று பல்லிளித்தார். "இல்லைங்க இதே கோயில்ல வேற ஒரு பூஜ செய்யனும்னு வந்தோங்க" என்று சொல்லி தன் கையிலிருந்த ஜோதிடர் அளித்த சீட்டை நீட்டியதும்."தெரியல மா, வெளிய கேட்டுக்கோங்கோ" என்று சுருங்கிப்போன முத்தை வைத்துக்கொண்டு சொல்லிவிட்டு அவர் வேலையை கவனித்தார். அருமையான ஒரு பிஸ்னஸ் கை நழிவிப்போனதின் வருத்தம் அவர் பேச்சிலும், சைகையிலும் நன்றாக தெரிந்தது.

சிறிது நேரம் தேடிவிட்டு எப்படியோ அந்த கோயிலைக் கண்டு பிடித்தோம். அடுத்த நாள் காலை 8 மணிக்கே அந்த கோயிலுக்கு சென்றோம். அங்கிருந்த கூட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். கிட்டத்தட்ட 60க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் அவரவர் பிள்ளைகளுடன் அந்த சிறு கோயிலுக்கு வெளியே காத்திருந்தனர். இன்னமும் அந்த பூஜைக்கான செலவு என்னவென்று எங்களுக்குத் தெரியவே தெரியாது. சிறிது நேரம் கழித்து பூசாரி ஒருவர் வந்து "வந்திருக்கவா எல்லாரும் சீட்ட கொடுங்கோ.." என்றார். இவருக்கு எப்படி சீட்டு விவகாரம் தெரியும். திருச்சி கோயிலிலுள்ள பூசாரிக்கு சென்னை அமிஞ்சிக்கரையிலுள்ள ஜோசியர் எழுதிக் கொடுத்த சீட்டைப் பற்றி இவருக்கு எப்படி தெரிந்தது என்று வியப்பில் நான் இருந்த போது தான் எல்லோரிடமும் அப்படி ஒரு சீட்டு இருப்பது தெரிந்தது. எல்லா சீட்டுகளும் வெவ்வேறு அளவுகளில், நிரங்களில் இருந்தன. அவை அனைத்தும் குறிப்பிட்ட ஒரு 5 அல்ல 6 ஜோதிடர்களிடம் இருந்து பெற்றவை என கணிக்க முடிந்தது. என் அம்மா பார்த்த ஜோதிடர் கொடுத்த சீட்டு போலவே 6 அல்ல 7 சீட்டுகள் பார்த்த ஞாபகம். திருச்சியிலிருக்கும் பூசாரிகளுக்கும் இன்னும் பல ஊர்களில் உள்ள ஜோதிடர்களுக்கும் இருக்கு தொடர்பை இது காட்டியது. அதுவும் கொடுமை என்னவென்றால் அந்த பூஜைக்காக அவர்கள் பெற்ற ஃபீஸ்(காணிக்கை - ஃபீஸுக்கு இடப்பட்டிருக்கு டீஜண்டான பெயர்) தலைக்கு ரூ 4000. உயிர் போய் உயிர் வந்தது எனக்கு. அந்த பூஜைக்கு அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் அனைத்துமே கோயில்களில் சாதாரணமாக கிடைக்கக் கூடியவையே. அதற்கு அவர்கள் பெரிதாக பணம் ஏதும் செலவு செய்யப் போவதில்லை என்று தெரிந்தது. தலைக்கு ரூ 4000 என்று பார்த்தால் அன்றைய வசூல் மட்டும் ரூ 2,40,000 (60 பேருக்கு - கணக்கு சரி தானே. நான் குமாரசாமி இல்லை !!!). என்ன பகல் கொள்ளை இது.

பூஜைக்கு வந்திருந்த பெண்கள்/ஆண்கள் பெரும்பாலும் 25 வயதிற்கு உட்பட்டவர்களாகவே தெரிந்தனர். 25 வயதுக்கு உட்பட்ட பெண்/ஆண் திருமணமாகவில்லை என்று பரிகாரம் செய்யச் சொல்லி அனுப்பியிருக்கும் ஜோதிட ஏஜன்டுகளின் கரிசனத்தை என்னவென்று சொல்ல. அவர் தாராளமாக அந்த பெண்ணை பெற்றவர்களிடம் "தினம் கடவுளை வணங்கி நம்பிக்கையோடு இருங்கள், பெண்ணுக்கு வயதிருக்கிறது" என்று சொல்லி திருப்பி அனுப்பியிருக்கலாமே. அகப்படும் அனைத்தையும் வைத்து தொழில் செய்தால் தானே முன்னேர இயலும் (உட்கார்ந்த இடத்திலே இருந்து கொண்டு) என்று வருபருக்கெல்லாம் ஏதாவது ஒரு கோயிலுக்கு சீட்டெழுதி கொடுத்துவிடுகிறார் கடவுளின் முதல் ஏஜென்ட். இரண்டாம் ஏஜென்டான கோயில் பூசாரி அந்தச் செயலை முடித்து வைத்து ஆண்டவனுக்கு இவர்களின் துனபத்தை தெரிவித்துவிட்ட திருப்தியுடன் வழியனுப்பி வைக்கிறார். அதற்கு பின் தான் பண பட்டுவாட இரு ஏஜென்டுகளுக்கும் இடையே நடந்து முடிகிறது. பூஜை செய்தாலும் செய்யாவிட்டாலும் நடக்கப் போகும் நிகழ்வுக்கு இந்த விரையம். நடந்துவிட்ட பின் "பன்ன பரிகாரத்துக்கு நல்ல வழிய காட்டிட்டான் அந்த கடவுளு" என்று கன்னத்தில் போட்டுக் கொள்கின்றனர். இந்த மக்களே பின்பு இந்த ஏஜென்டுகளை இலவசமாக விளம்பரம் வேறு செய்து தருகிறார்கள்.

இதையெல்லாம் பார்க்க சகிக்காமல் பூஜை துவங்கும் முன்னமே கிளம்பி நாங்கள் தங்கியிருந்த விடுதியை அடைந்தேன். இப்படி ஏன் ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறார்கள் என்று அந்த இரு ஏஜென்டுகளையும் மனதுக்குள் திட்டி தீர்த்தேன்.

ஒன்று மட்டும் உண்மை...

கடவுள் இல்லையென்று சொல்லும் என்னைப் போன்ற நாத்தீகர்களை விடுங்கள், கடவுள் பெயரால் பகல் கொள்ளை அடிக்கும் இது போன்ற ஏஜென்டுகளை வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி வையுங்கள்.

- ராஜேஷ் சுப்பிரமணியன்.

அரசியல் கட்சிகளின் அரசியல்

சில நிகழ்வுகள் நம் எல்லோர் மனதிலும் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கும். பலரிடம் அந்த நிகழ்வுகளை குறித்து உரையாடுவோம், விவாதிப்போம் எனினும் விடை என்னவோ மீண்டும் ஒரு கேள்வி தான். ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?. அந்த கேள்வியின் தொடர்ச்சியாக இன்னும் பல புதிய கேள்விகள் துளிர்த்து எழும். இந்த கேள்விகள் ஒரு சுழர்ச்சி போல கீழே வரும் மீண்டும் மேல் நோக்கி எழும். வேகம் அதிகமாகும் குறையும் ஆனால் சுழர்ச்சி நிற்காது. அரசியலில் அதுவும் தமிழக அரசியலில் நிகழும் பல நிகழ்வுகள் நம் சிந்தனையை இப்படி ஒரு கேள்வி சுழர்ச்சிக்குள் தள்ளுபவை தான். அந்த பல கேள்விகளுள் என்னை படு வேகமான ஒரு கேள்வி சுழர்ச்சியில் சுற்ற வைத்துக் கொண்டிருப்பது இக்காலத்து அரசியல் தலைவர்களுக்கு சாமாணிய மனிதர்கள் அளிக்கும் ஈடு இணையற்ற ஆதரவு.

இந்த சந்தேகத்தை நான் எழுப்புகையில் பலருக்கு உடனே நினைவுக்கு வருவது என்னவோ அம்மாவை பற்றி தான். ஆம், அவரது பல வருட கால அரசியல் வாழ்வில் அவர் கடந்த பல தடைகளுள் அவர் இப்பொழுது கடக்கயிருக்கும் தடை மிக கடிணமானது. அவரது விடுதலை தேசிய அரசியலில் அவருக்கு இருந்த பலத்தை எடுத்துக்காட்டியது (விரிவாக விவரிக்க தேவை இல்லை என எண்ணுகிறேன்). தேசிய அரசியலில் முதல்வர் ஜெயலலிதா ஏற்படுத்தியுள்ள பாதிப்பு பெரும் வியப்பை எனக்களிக்கவில்லை மாறாக அவர் மீது சாமாணியர்கள் காட்டும் அன்பு தான் பேரதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இப்படி நான் சொல்லும் போது பலரின் மனதில் எழும் ஐயம் என் காதுகளில் ஒலிக்கவே செய்கிறது. அது என்னவெனில் அம்மாவின் மீது அவர்கள் தொண்டர்கள் காட்டுவது அன்பா ? இல்லை அதன் மூலம் கிடைக்கும் ஆதாயமா ?.

அரசர்கள் காலத்து ஆட்சிக்கு பிறகு நாம் பல்வேறு அரசியல் தலைவர்களை கண்டிருக்கிறோம். காந்தி கையசத்து "அஹிம்சை முறையில் போராடுவோம்" என்றதும் கோடிக்கணக்கானோர் நாடு முழுவதும் அவர் பின்னே திரளாக சென்றனர். "இளைஞர்களே நாட்டுக்காக உயிர் தியாகம் செய்து ஆயுத போராட்டம் செய்யுங்கள். விடுதலையை நாம் பெருவோம்" என்றதும் அவர் பின்னும் பலர் சென்றனர், உயிர் தியாகம் செய்தனர். கர்ம வீரர் காமராஜரோ அவரின் எளிமையான திறமையான அரசியலின் மூலம் பலரின் மாண்பை பெற்றார். பல தொண்டர்கள் அவரை கடவுளாகக் கருதி பணி செய்தனர். பக்தவச்சலம், கக்கன், ராஜாஜி என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த காலத்தில் அப்படி ஒரு நிலை உள்ளதா என்று எண்ணிப் பார்த்தால் பலர் எந்த தயக்கமுமின்றி இல்லை என்றே பதிலளிப்பார்கள். அப்படியென்றால் அரசியல் தலைவர்கள் மீது தொண்டர்கள் அன்பு காட்டுவது போல் நடித்து அவர்களுக்கு வேண்டியவற்றை அடைகின்றனர் என்றே தோன்றுகிறது. அனைவருமே பொய்யர்கள் என்று கூற இலயாது என்றாலும் பெரும்பாலும் பொய்யர்கள், சுயநலம் பிடித்தவர்களே.

இந்த மாற்றம் அரசியலில் அதுவும் நம் தமிழகத்தில் எப்பொழுது நடந்தது என்றே தெரியவில்லை. அது என்னவென்றால், இப்பொழுது அரசியல் கட்சிகளில் தொண்டர்களாக இருப்பவர்கள் "மாபெரும் கொலைகாரர்கள்", "திருடர்கள்" "ஏமாற்றுக்காரர்கள்" என்று பார்ப்பவர்கள் அனைவருமே தனக்கென்று ஏதோ ஒரு ஆதாயம் தேடியே அரசியல் கட்சிகளுக்குள் நுழைகிறார்கள். இந்த உண்மையை யாராலும் மறுக்கவே இயலாது. ஒரு முறை அமெரிக்காவில் தேர்தல் காட்சிகளை பிபிசி நேரலையில் ஒளிபரப்பியதை கண்டபோது வியந்தேன், அங்கு ஓட்டுச் சாவடிக்கு அருகே ஒரு சிலர் கூடி பேசிக் கொண்டிருந்தனர் அவர்களை பிபிசி பேட்டி எடுத்த போது அவர்கள் அளித்த சில பதில்கள் எனக்கு பெரும் வியப்பாகவே இருந்தது. அவர்களில் சிலர் "ஜான் கெர்ரி" ஆதரவாளர்கள் சிலர் "ஜார்ஜ் புஷ்" ஆதரவாளர்கள் ஒரு சில சாமாணியர்களும் இருந்தனர். அவர்கள் வெளிப்படையாக போட்டியிடும் தலைவர்களை விமர்சித்தனர். ஆனால், யாரும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை. ஒருவரிடம் இருந்து வந்த விமர்சனத்தை மற்றொருவர் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டார். இங்கோ ஒரு "ஏரியா கவுண்சிலர்" பற்றி விமர்சித்தாலே என்ன ஆகுமென்று அறியாதோர் இல்லை.

நம் நாட்டில் எங்கு தேர்தல் நடந்தாலும் ஓட்டு பதிவாகும் சதவிகிதம் 60%ல் இருந்து 70% கடக்கத் திணறுவதைக் காணமுடிகிறது. ஓட்டு போடாதவர்கள் சோம்பேரிகள், இந்த நாட்டின் எதிர்காலம் குறித்த கவலையோ ஆர்வமோ எள்ளளவும் இல்லாதவர்கள் என்ற விமர்சனம் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் யாருக்கு ஓட்டு போட்டாலும் ஒன்று தானே என்று கருதுகின்றனர் என்பதை மறுக்க இயலாது. இந்த நாட்டில் அரசியல் கட்சிகளின் தலைமை சீர்கெட்டுப் போயிருப்பது உண்மை. அதன் விளைவாக தான் இப்பாடி எல்லம் நடக்கிறது என்று அனைவரும் அறிந்ததே. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெரும் பணம் சேர்ப்பதையே குறிக்கோளாக வைத்துள்ளனர். அதற்காக அவர்கள் தொடர்ந்து செய்யும் செயல்கள் தான் இவை. நாட்டில் உள்ள அனைத்து கெட்டவர்களின் குடியிருப்பாகவே மாறிவிட்டது அரசியல் கட்சிகள் அவர்களை வைத்து தான் அரசியலே நடத்துகிறார்கள் அப்படி அவர்களை வைத்து அரசியல் கட்சி தலைவாகள் செய்வதென்ன?...இந்த நாட்டின் அரசியலில் நுழைந்து மக்களுக்கு நல்லது செதுய்விடுவோம் என்று எண்ணும் அனைவரையும் அடுத்த அடியையே எடுத்து வைக்க இயலாதவாறு முடக்குவேதே இவர்களது வேலையாக உள்ளது. மக்கள் மாற்றத்தை வேண்டி காத்திருக்கிறார்கள், இப்பொழுது தமிழ் நாட்டில் கோலோச்சும் அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக வேறு ஒரு கட்சியை, நல்லது செய்ய விழியும் கட்சியை ஆதரிக்க தயாராகவே உள்ளனர் ஆனால், மாற்றாக தோன்றுபவர்களை வளர விட்டால் தானே மக்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டும். ஒரு செடிகயை வளர விடாமல் வெட்டி எறிந்தால் அவை எவ்வாறு மரமாகும்?. அதை தான் இந்த அரசியல் கட்சித் தொண்டர்கள் அவர்கள் தலைவர்களுக்கு செய்யும் மாபெரும் தொண்டாக உள்ளது.

ஆங்கிலத்தி "Mutual benefit"என்று சொல்லுவார்கள் அதாவது, உனக்கு ஒரு லாபம் எனக்கு ஒரு லாபம். அரசியலில் இப்பொழுது நிகழ்வதெல்லாம் இப்படிப்பட்ட ஆதாய பகிர்வுகள் தான். இதற்கு இந்நாட்டின் ஏழ்மையும் ஒரு முக்கிய காரணமாக அமைகறது. ஏழ்மையில் இருக்கும் இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டிய அரசிய்வாதிகள் மாறாக தவறான வழிகளைக் காட்டுகிறார்கள். அவர்கள் செய்து கொடுக்கும் சில வேலைகளில் கிடைக்கும் பணத்துக்கும் சிறு புகழ்ச்சிக்கும் நன்றியாக நடந்து கொள்கிறார்கள். இவர்களே இப்போதைய அரசியல் கட்சிகளின் எதிர்கால தூண்களாகம் மாறிப்போகிறார்கள். இவற்றை அம்மாவோ ஐயாவோ நேரடியாவா வந்து செய்ய இயலுமா ? இல்லை, இயலாதல்லவா. இப்படி சமூகத்தின் மேல் தங்களுக்குள்ள ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ள சாமாணிய மனிதர்களையே பயன்படுத்துகின்றனர் அரசியல் கட்சிகளின் பெரும்புள்ளிகள். இப்படி அரசியல் கட்சிகள் சராசரி மனிதர்களை தூபம் போட்டு பெரும் கொலைகாரர்களாகவும், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களாகவும் உருவாக்கி அவர்களுக்கு "நாய் பிஸ்கட்" போல் அவ்வப்போது சிலவற்றை தூக்கி போட்டுவிட்டு அவர்கள் அனைவரின் பெரும் துணையுடன் உச்சத்தில் உள்ளனர்.

மொட்டை போடுகிறார்கள், கோயில் கோயிலாக சென்று பூஜை செய்கிறார்கள், மண் சோறு உட்கொள்ளுகிறார்கள் இன்னும் என்னென்னவோ செய்கிறார்கள். மேலிடத்தின் பார்வையில் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதை விட இது வேறு எதையும் காட்டவில்லை. இப்பொழுது பெரும் தலைவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள பெரும்பாலான தலைவர்களுமே பல வருடங்களுக்கு முன் சிறு சிறு ரவுடித்தனம் செய்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இப்பொழுது அப்படி இருக்கும் சிலர் நாளை இரண்டாம் கட்ட அரசியல் தலைவர்களானால் அது ஒன்றும் பெரும் வியப்பை அளித்து விடாது. இந்த நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்த நிகழ்வு நிற்காமல் இயங்கிக் கொண்டிருக்கும் போது எந்த துறையிலும் முழுமையான முன்னேற்றம் என்பது இருப்பது கேள்விக்குறி தான்.

- ஒன்று பணம் புகழ் என்று அங்கலாய்க்கும் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களும், அடுத்தக் நிலை தலைவர்களும் திருந்த வேண்டும்

- இல்லையேல் அரசியல் கட்சிகளால் தனக்கு கிடைக்கும் ஆதாயங்களுக்காக அவர்களுடன் இணைந்து செயல்படும் சாமாணியர்கள் திருந்த வேண்டும்.


- அதுவும் நடக்காது போனால், வீணே அரசியல்வாதிகளை குறை கூறாது குறயுள்ள அரசியல்வாதிகளை எதிர்க்க நல்லவர்வள் அரசியல் செய்ய முன்வர வேண்டும்

இதில் ஏதேனும் ஒன்று நடந்துவிட்டால் கூட நம் நாடு பிழைத்துக் கொள்ளும். இல்லையேல் ஒவ்வொரு முறை ஆதிக்க சக்திகளின் கொடுமை எல்லைகளை மீறும் போது மக்கள் புரட்சி வெடிப்பது போல் ஒரு புரட்சி இங்கும் வெடித்தால் தான் இதற்கெல்லாம் விடிவு காலம்.

நம் நாடு நல்வழியில் பயணிக்க அப்படியொரு புரட்சி தேவைப்படாது என்று அன்ழிவரும் நம்பிக்கையுடன் காத்திருப்போம் மாற்றத்தை எதிர்நோக்கி.

- ராஜேஷ் சுப்பிரமணியன்